சில பாடல்களும்,சில நினைவுகளும்

நாம் சில பழைய,சிறு வயதில் கேட்ட பாடல்களை தற்போது கேட்கும் போது அந்த காலத்திற்கே சென்று விடுவது உண்டு.அப்படி பழைய நினைவுகளுக்கு என்னை இட்டுசெல்லும் பல பாடல்கள் உண்டு அவற்றில் சில.......

சமீபத்தில் ஊருக்கு சென்ற போது தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் போது பஸ்சில் கேட்ட பாடல்!

''உன்னநம்பி நெத்தியிலே பொட்டு வைச்சேன் மத்தியிலே -ராசா பொட்டு வைச்சேன் மத்தியிலே... நெத்தியிலே......பொட்டு வைச்ச காரணத்த புரிஞ்சுக்க ராசா .....''


இந்த பாட்ட கேக்கும்போது எனக்கு அந்தமான் தான் நினைவுக்கு வரும்! நான் பிறந்தது நாலாவது வரை படிச்சது எல்லாம் அந்தமான்லதான். அந்தமான் போர்ட் ப்ளேயர்ல ஒரு குருத்துவாரா (சீக்கியர் கோயில்) இருக்கு! அதன் எதிர்ல தான் எங்க வீடு! கொஞ்ச தூரத்துல அபர்டீன் பஜார் அங்க என் அப்பா ஒரு நகை கடை வைச்சு இருந்தார்!ஒரு தடவ ஒரு சாயங்கால நேரம் எங்க வீட்டுல இருந்து எங்க கடைக்கு போறேன் அப்போரொம்ப தூரத்துல இந்த பாட்டு கேட்டது! அது அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு போல!
இந்த பாட்ட எப்போ கேட்டாலும் அந்த சாயங்கால நேரமும் எங்க கடைக்கு போனதும் கண்ணுக்குள்ள வந்துடும்.

அந்தமான் அப்படின்னதும் மேலும் சில நினைவுகள்!

அங்க அபர்டீன் ஸ்கூல் ல நாலாவது வரைக்கும் தான் படிச்சேன் அதுக்கு மேல அங்க ஏன் படிக்கல? ம்ம்ம்..... எல்லாம் அரசியல்தான்!


என் அப்பா அங்க திமுக வில இருந்தார். தீவிர அரசியல் வாதி! அதோட அவர் ஒரு மேடை பேச்சாளர்!

என் அப்பா ஒரு தீவிர எம்ஜியார் அபிமானி!


எம்ஜியார் திமுகவில இருந்து விலகி அதிமுக ஆரம்பிச்சப்போ என் அப்பா அந்தமான்ல தன் ஆதரவாளர்களுடன் திமுகவில இருந்து வெளியேறி அங்க அதிமுகவ துவக்கியவர்! மேலும் அந்தமான் அதிமுக அமைப்பாளராகவும் தீவிரமாக பணியாற்றியவர்!அதன் விளைவு ! கடையை சரியாக கவனிக்காமல் தொழில் நொடித்து கடனாளியாகிகடையை விற்றுவிட்டு ! நான்கு பிள்ளைகளுடன் நிராயுத பாணியாக சொந்த ஊரு திரும்பிய சிறப்புமிகு சரித்திரத்துக்கு சொந்தகாரர்! அதனால தான் அங்க நான் அஞ்சாவது படிக்கல! எங்க மதுக்கூர் லதான் அஞ்சாவது முதல் பன்னெண்டாவது வரை படிச்சேன்!

இப்போ கூட எனக்கு ஒரு ஆசை இருக்கு பிளைட்ல அந்தமான் போகணும் பெரிய ஸ்டார் ஹோட்டல் ல தங்கி அந்தமான்ல நான் டவுசர் மட்டும் போட்டுக்கிட்டு ஓடி விளையாடின இடங்கள பார்க்கணும்! அங்க என்னை ஒருவாட்டி நாய் கடிச்சுடிச்சிஅந்த தழும்பு, அங்க ஏற்பட்ட மேலும் சில தழும்புகள் என் கால்ல இருக்கு இதையெல்லாம் அங்கபோய் பார்க்கணும்! அப்போதான் என் ஆத்மா அமைதியாகும்! ;;))

----------------------------------------------------------------------------------------------

ஊருபக்கம் திருவிழா ன்னாலே சில எல்.ஆர் ஈஸ்வரி பாடல்கள ஸ்பீக்கர்ல புல் சவுண்டுல அலற விடுவாங்க! மேலும் சில பாட்டுக்கள் உண்டு கண்டிப்பா அந்த பாட்டுகள் திருவிழாவில அலறும்!!

அப்படி ஒருபாட்டு ! கன்னி பருவத்திலே படத்துல வந்தது!

நடைய மாத்து! ஒன் நடைய மாத்து! அக்கா நீ என்ன பாத்து ஆடுருறியே கூத்து அசையுது ஒன்ன போல நாத்து .... அசையுது ஒன்ன போல நாத்து நடைய மாத்து!

நடைய மாத்து நீ .......நடைய மாத்து அத்தான் நீ என்ன பாத்து ஆடுறியே கூத்து அசையுது ஒன்ன போல காத்து அசையுது ஒன்ன போல காத்து
நடைய மாத்து !


பொள்ளாச்சி ரோட்டுமேல பொழுது சாயும் நேரத்துல புல்லாக்கும் பொன் தோடு மா போற புள்ளநீ.... தொண வேணுமா போடு தினாக்கு!!

பொல்லாத பொண்ணு என் பொல்லாப்ப வாங்கவரும் கில்லாடி எவனுமில்ல என் மச்சானே! இல்லாட்டி கொறவே இல்ல போடு தின்னாக்கு

தினாக்கு! தினாக்கு! தினாக்கு! போடு!! தினாக்கு! தினாக்கு! தினாக்கு!

ஏய்! நடைய மாத்து!!!

குத்து பாட்டுன்னா.. குத்து பாட்டு ... அப்படி ஒரு குத்து பாட்டு இந்த பாட்டு ...

இந்த பாட்டு வந்த புதுசுல எல்லா திருவிழா விலையும் செம குத்து குத்தும்
இந்த பாட்டு ...


இந்த பாட்ட கேக்கும் போது எனக்கு எங்க ஊரு பெரமையா கோயில் திரு விழாதான் வந்து நிக்குது!

கரகாட்டம் ,குறவன் குறத்தி டான்ஸ் (யப்பா) சர்பத் கடை, அப்புறம் நமக்கு வேண்டப்பட்ட புள்ளைங்க எல்லாம் என்ன புது டிரஸ் போட்டு இருக்குன்னு தேடுறது அந்த கற்பூர வாசனை எல்லாம் மனசுல ஜில்லுன்னு வந்தது நிக்குது!

அப்புறம் அதுல முக்கியமா சிதறு தேங்கா பொறுக்குறது ! ஒருவாட்டி நெறைய செதறு தேங்கா பொறுக்கி வைச்சு இருந்தேன் நமக்கு வேண்ட பட்ட புள்ள ஒன்னு பார்த்துடிச்சி ஆஹா! பொறுக்குறது செதறு தேங்காயா இருந்தாலும் கவுரதய உட முடியுமா? அந்த புள்ள என் கிட்ட க்க வருது நான் அப்படியே பொறுக்குன தேங்காய பின்னாடி மறைச்சுகிட்டு அந்தாண்ட போயிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா என் கூட தேங்கா பொறுக்குன இன்னொரு பையன் கிட்ட தேங்கா வாங்கி தின்னுகிட்டு நிக்குது அந்த புள்ள. ச்சே மிஸ் பண்ணிட்டேன்.

-------------------------------------------------------------------------------------------------

ஒரு புது படம் ரிலீஸ் ஆனா எங்க ஊருக்கு வர குறைஞ்சது மூனு நாலு மாசம் ஆகும் நான் ப்தினுன்னு, பன்னெண்டாவது படிக்கிறப்போ புது படம் பார்க்க பட்டுகோட்டைக்கு பசங்களோட சேந்து போவேன் நைட் ஷோ போவோம் எல்லோரும் ஷேர் பண்ணி கார் எடுத்துகிட்டு போவோம்! ஒருவாட்டி அப்படி போயிட்டு திரும்புறோம் பசங்க எல்லாம் உச்சா போக வண்டிய நிறுத்த சொல்லுறாங்க! நல்ல மை இருட்டு ! கடும் நிசப்தம் அப்போ கார்ல டிரைவர் ஒரு பாட்டு போட்டார் பாருங்க! கனத்த இசை! தேவலோக தேவதை போல எஸ் . ஜானகி பாடின பாடல்

அரண்மனை கிளி படத்துல ...........

வான்மதியே....... ........வான்மதியே ......தூது செல்லு ... வான்மதியே
மாளிகை பொன்மாடம்... மல்லிகை பூ மஞ்சம்...யாவுமே இநேரம் ....
ஏற்குமோ என் நெஞ்சம்....காதலன் வாசல் வரவேண்டும் ..நீயும் என் சேதி சொல்ல வேண்டும் .................

அந்த பாட்டு! அந்த இடம்! அந்த கார் ஸ்டீரியோ! எல்லாம் மனசுல!
அப்போ நினைச்சுகிட்டேன்! சொந்தமா ஒரு கார் வாங்கனும்! இதே பாட்டை
இதேபோல நேரத்துல இந்த இடத்துல காரை நிப்பாட்டி கேக்கணும்!

>